Sunday, September 26, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:15


நான்கு மத்ஹபுகளை மட்டும் ஏன் பின்பற்றுகிறோம்


 தனிநபரை தக்லீதை(பின்பற்றுவது)குறித்து முன்னால் பாரத்தோம். இப்போது மற்றொரு கேள்வி எழுகிறது? ஏதேனும் ஒரு இமாமை குறிப்பாக பின்பற்றுவது கட்டாயம் என்றாலும் நான்கு இமாம்களை மட்டும் பின்பற்றுவதன் குறிப்பான அம்சம் என்ன? நமது உம்மத்தில் எத்தனையோ முஜ்தஹித்கள் வாழ்ந்துள்ளார்கள் உதாரணமாக ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்),அவ்ஜாயி (ரஹ்), இப்னு முபாரக் (ரஹ்), இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் (ரஹ்),இமாம் புகாரி (ரஹ்) இப்னு அபிலைலா (ரஹ்) இப்னு ஷப்ரமா (ரஹ்),ஹஸன் இப்னு ஸாலிஹ் போன்றவர்கள் முஜ்தஹித் (ஆய்வாளர்)களாக இருந்துள்ளார்கள்.அவர்களில் யாரையும் ஏன் தக்லீத் செய்யவில்லை? 

  நமது பதில்:
  நான்கு இமாம்களை தவிர மற்ற இமாம்களின் பிக்ஹ் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை என்பதால் அவர்களை தக்லீத் செய்யவில்லை.நான்கு இமாம்களின் மத்ஹபுகளின் பிக்ஹ் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டதைப் போன்று இருந்திருந்தால் சந்தேகமின்றி அவர்களில் யாரை வேண்டுமானாலும் தக்லீத் செய்யலாம்.ஆனால்,அவர்களின் மத்ஹபுகளின் விரிவான நூல்கள் இல்லை.அவர்களை பின்பற்றும் உலமாக்களும் இல்லை.இதனால் இப்போது அவர்களை தக்லீத் செய்வதற்கு எந்த ஒரு வழியும் இல்லை.

பிரபல்யமான முஹத்திஸ் ஹதீஸ்கலை(வல்லுநர்) அல்லாமா அப்துர்ரஊஃப் மனாவி (ரஹ்) அவர்கள்,ஹாபிள் தஹபி (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்து சொல்கிறார்கள்: 
و يجب علينا أن نعتقد أن الأئمة الأربعة و السفيانين و الاوزاعى و داؤد الظاهرى و اسحاق بن راهويه و سائر الأئمة على هدى.....و على غير المجتهدين أن يقلد مذهبا معينا ......لكن لا يجوز تقليد الصحابة و كذا التابعين كما قاله أمام الحرمين من كل من لم بدون مذهبه فيمتنع تقليد غير الاربعة فى القضاء و الإفتاء لأن المذاهب الأربعة انتشرت تحررت حتى ظهر تقييد مطلقها و تخصيص ما عليها بخلاف غيرهم للانقراض اتباعهم و قد نقل الامام الرازى رحمه الله تعالى إجماع المحققين على منع العوام من تقليد أعيان الصحابة و اكابرهم 
நான்கு இமாம்கள்,இரு ஸுப்யான்கள்(ரஹ்), (ஸுப்யான் ஸவ்ரி,ஸுப்யான் இப்னு உயைனா),இமாம் அவ்ஜாயி(ரஹ்),தாவூத் ளாஹிரி (ரஹ்),இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ் (ரஹ்)போன்ற அனைத்து இமாம்களும் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பதை நம்பிக்கை கொள்வது நம்மீது அவசியமாகும்.....முஜ்தஹிதாக
(ஆய்வாளராக) இல்லாதவர் மீது ஏதேனும் குறிப்பான மத்ஹபை பின்பற்றுவது கடமையாகும். இமாமுல் ஹரைமைன் சொல்லின் படி மத்ஹப் நூல்கள் தொகுக்கப்படாத,கோர்வை செய்யப்படாத ஸஹாபாக்கள்,தாபியீன்கள்,மற்ற இமாம்களை தக்லீத் செய்வது அனுமதியில்லை.எனவே ஃபத்வாக்களில் நான்கு மத்ஹபுகளை தவிர வேறு யாரையும் தக்லீத் செய்வது கூடாது.ஏனெனில் நான்கு மத்ஹபுகளின் பிக்ஹ் நூல்கள் தொகுக்கப்பட்டு பரவலாகி விட்டது.அவைகளின் பொதுவான வார்த்தைகள் வரையறுக்கப்பட்டு,பொதுப்படையான வார்த்தைகள் குறிப்பாக்கப்பட்டு தெளிவாகி விட்டது.இதற்கு நேர்மாறாக மற்ற மத்ஹபுகளை பின்பற்றுபவர்கள் வாழ்ந்து சென்றுவிட்டனர்.இமாம் ராஜி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிரபல்யமான ஸஹாபாக்களை,இமாம்களை தக்லீத் செய்வதிலிருந்து,பொது மக்களை தடுக்கவேண்டும் என்பது உறுதிமிக்க ஆய்வாளர்களின் ஒன்றுப்பட்ட கருத்தாகிவிட்டது.

(ஆதாரம்:ஃபைளுல் கதீர் ஷர்ஹு ஜாமிஉஸ்ஸஙீர் வில் மனாவி (ரஹ்)1/210)

இது குறித்து அல்லாமா நவவி (ரஹ்) அவர்களின் தெளிவான விளக்கத்தை பார்ப்போம் 

وليس له التمذهب بمذهب أحد من أئمة الصحابة وغيرهم من الأولين، وإن كانوا أعلم وأعلى درجة ممن بعدهم؛ لأنهم لم يتفرغوا لتدوين العلم وضبط أصوله وفروعه، وليس لأحد منهم مذهب مهذب محرر مقرر، وإنما قام بذلك من جاء بعدهم من الأئمة الناخلين لمذاهب الصحابة والتابعين، القائمين بتمهيد أحكام الوقائع قبل وقوعها، الناهضين بإيضاح أصولها وفروعها، كمالك وأبي حنيفة وغيره
ஸஹாபாக்கள்,முதல் நூற்றாண்டின் இமாம்களின் அந்தஸ்தை கவனிக்கும் போது, பிறகு வாழ்ந்த முஜ்தஹித்களை (ஆய்வாளர்களை)விட மிகவும் உயர்ந்தவர்கள்.ஆனால், அவர்களின் மார்க்க ஞானம்,அதனின் அடிப்படைகள், கிளைச் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்படும்,கோர்வை செய்யப்படும் வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை.இதனால் எவருக்கும் அவர்களின் பிக்ஹ் மத்ஹப் சட்டங்களை பின்பற்றுவதற்கு அனுமதியில்லை.ஏனெனில் அவர்களின் வழிமுறை தொகுக்கப்படவில்லை.எழுதப்பட்டு நூல் வடிவிலும் இல்லை.அசலில் பிக்ஹ் சட்டங்களை தொகுக்கும் வேலையானது ஸஹாபாக்கள்,
தாபியீன்களின் மத்ஹபில் இருந்த தலைசிறந்த உலமாக்கள் தான்.மேலும் அவர்கள் நவீன பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை நிகழ்வதற்கு முன்பாக அதற்குரிய சட்டங்களை தொகுத்தனர்.தங்களின் மத்ஹபுகளின் அடிப்படைகள்,கிளைச்சட்டங்களை தெளிவுப்படுத்திவிட்டனர்.
இமாம் மாலிக் (ரஹ்),இமாம் அபூஹனீபா (ரஹ்) போன்றோர் (ஆதாரம்:அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப் லின்நவவி 1/91)

இந்த தலைப்பில் ஏராளமான உலமாக்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
எனினும் சுருக்கமாக இரண்டு மிகப்பெரும் அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகிறோம்.

இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் தனது பத்வா நூலில் எழுதியுள்ளார்:

ليس في الكتاب والسنة فرق في الأئمة المجتهدين بين شخص وشخص . فمالك والليث بن سعد والأوزاعي والثوري : هؤلاء أئمة في زمانهم وتقليد كل منهم كتقليد الآخر ; لا يقول مسلم إنه يجوز تقليد هذا دون هذا ولكن من منع من تقليد أحد هؤلاء في زماننا فإنما يمنعه لأحد شيئين . 

( أحدهما اعتقاده أنه لم يبق من يعرف مذاهبهم وتقليد الميت فيه نزاع مشهور . فمن منعه قال هؤلاء موتى ومن سوغه قال لا بد أن يكون في الأحياء من يعرف قول الميت . 

و ( الثاني أن يقول : الإجماع اليوم قد انعقد على خلاف هذا القول.............. 

وأما إذا كان القول الذي يقول به هؤلاء الأئمة أو غيرهم قد قال به بعض العلماء الباقية مذاهبهم فلا ريب أن قوله مؤيد بموافقة هؤلاء ويعتضد به  

குர்ஆன்,சுன்னாவை கவனிக்கும் போது முஜ்தஹித்(ஆய்வாளர்)களான இமாம்களுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை.இமாம் மாலிக்(ரஹ்),லைஸ்(ரஹ்),
அவ்ஜாயி(ரஹ்),ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்)போன்றவர்கள் அக்காலத்தின் தலைசிறந்த இமாம்களாக திகழ்ந்தார்கள்.ஒரு இமாமை தக்லீத் செய்வதும் மற்றொரு இமாமை தக்லீத் செய்வதும் சரிசமமானது.இவரின் (முஜ்தஹிதின்) தக்லீத் கூடும்.மற்றொருவரின் (முஜ்தஹிதின்) தக்லீத் கூடாது என்பதாக எந்த முஸ்லிமும் கூறமுடியாது.ஆனால் மார்க்க அறிஞர்கள்,சிலரின் தக்லீதை (மத்ஹபை)தடுத்தது இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்றின் காரணமாகும்.
  முதல் விஷயம்:
அந்த இமாம்களின் மத்ஹபுகளை முழுமையாக அறிந்தவர்கள் இல்லை.மேலும் மரணித்த இமாமை தக்லீத் செய்வதில் கருத்துவேறுபாடு பிரபல்யமாக உள்ளது.அதாவது,தக்லீதை தடுப்பவர்களின் வாதம்,அந்த இமாம் இறந்துவிட்டார்.(ஆதலால் அவரை தக்லீத் செய்ய முடியாது) மரணித்த இமாமை தக்லீத் செய்பவர்களின் வாதம்,அந்த இமாம்கள் மரணித்த போதும் அவரின் மத்ஹபை முழுமையாக அறிந்த உலமாக்கள் வாழ்கிறார்கள்.(ஆதலால் இமாமை தக்லீத் செய்ய முடியும்)

இரண்டாவது விஷயம்:
எந்த இமாம்களின் மத்ஹபுகள் நிலைக்கவில்லையோ அவர்களின் கூற்றுகளை (மத்ஹபுகளை) பின்பற்றுவது கூடாது என்பதாக ஒன்றுபட்ட கருத்து உருவாகிவிட்டது....... எனினும்,சென்று விட்ட இமாம்களின் சொல்லானது,நிலைத்திருக்கும் மத்ஹபுகளின் சொல்லுக்கு ஏற்ப இருந்தால்,சந்தேகமின்றி நிலைத்திருக்கும் மத்ஹபுகளின் கருத்துக்களுக்கு அவைகள் வலுவூட்டும் தாகவும்,உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.
(ஆதாரம்:அல்ஃபதாவல் குப்ரா லி இப்னி தைய்மிய்யா,2/ 446,فيمن صلى خلف الصف منفردا )

அடுத்து ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் இந்த தலைப்பில் தனியானதொரு பாடத்தை எழுதியுள்ளார்கள்.
(باب تأكيد الأخذ بهذه المذاهب الأربعة و التشديد فى تركها و الخروج منها)
[நான்கு மத்ஹபுகளை தேர்ந்தெடுப்பதை வலியுறுத்துவது.அதனை விட்டுவிடுவதும், வெளியேறுவதும்  தடை]
اعلم أن فى الأخذ بهذه المذاهب الأربعة مصلحة عظيمة و فى الأعراض عنها كلها مفسدة كبيرة و نحن نبين ذلك بوجوه 
நான்கு மத்ஹபுகளை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரும் நுட்பம் அடங்கியுள்ளது.அவைகள் அனைத்தையும் புறக்கணிப்பதில் மிகப்பெரும் கெடுதிகள் உள்ளது.நாம் இதனை பல காரணங்களின் மூலம் தெளிவுப்படுத்துகிறோம் என்பதாக ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதனை சுருக்கமாக பார்ப்போம்.

1)ஷரீஅத்தை புரிவதில் முன்னோர்களான இமாம்களின் கருத்தை ஏற்பதானது உம்மத்தின் ஒன்றுபட்ட கருத்தின்படி பொருத்தமானது.எனினும், முன்னோர்களின் சொற்களை ஏற்பதானது,அவைகளின் ஆதாரங்கள் உறுதிமிக்க அறிவிப்பாளர் தொடருடன் நம்மை அடைந்திருக்க வேண்டும்.அல்லது பிரபல்யமான நூல்களில் தொகுக்கப்பட்டு இருக்கவேண்டும்.மேலும் அவர்களின் சொற்களை ஏற்பதில் பிறகு வாழ்ந்த உலமாக்கள் அதனை தெளிவுப்படுத்தி,
விளக்கி சேவைசெய்து இருப்பது அவசியமாகும்.அவர்களின் சொற்களில் பலவிதமான அர்த்தம் இருப்பதற்கு வாய்ப்பு இருந்தால், முன்னுரிமை கொடுக்கும் அர்த்தத்தை குறிப்பாக்கவேண்டும்.மேலும் சில சமயங்களில் ஏதேனும் முஜ்தஹிதின் சொல் வெளிப்படையில் பொதுவாக இருக்கும்.எனினும்,அதில் குறிப்பான அர்த்தம் நாடப்படும்.இதனை அந்த மத்ஹபின் திறமையான உலமாக்கள் புரிந்துகொள்வார்கள்.இதனால் அந்த மத்ஹபின் அறிஞர்கள்,அந்த நிலைகளை தெளிவுப்படுத்தி,அதனின் சட்டங்களின் காரணிகளையும் விளக்கியிருப்பார்கள்.ஒரு முஜ்தஹிதின் மத்ஹபில் இதுபோன்ற சேவை இல்லையெனில் அதன் மீது நம்பிக்கை வைப்பது சரியில்லை.இதுபோன்ற தன்மைகள் நமது காலத்தில் நான்கு மத்ஹபுகளை தவிர வேறு மத்ஹபில் பெறப்படவில்லை.இதிலிருந்து இமாமிய்யா,ஜைதிய்யா மட்டும் விதிவிலக்காகும்.எனினும், அவர்கள் பித்வாதிகளாக (ரவாபிள்கள்) இருக்கிறார்கள்.இதனால் அவர்களின் சொல்லை ஏற்பது சரியில்லை.

2)நான்கு மத்ஹபுகளை பேணுவதின் மற்றொரு காரணம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
اتبعوا السواد الأعظم 
"பெரும் கூட்டத்தைப் பின்பற்றுங்கள்" 

நான்கு மத்ஹபுகளை தவிர மற்ற மத்ஹபுகள் வழக்கொழிந்து விட்டது.எனவே இப்போது நான்கு மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் ஏற்றமானது.
இதனை விட்டு வெளியேறுவது பெரும் கூட்டத்திற்கு எதிரானது.

3)நான்கு மத்ஹபுகளுக்கு வெளியே உள்ள முஜ்தஹிதின் சொல்லின் பேரில் பத்வா அளிக்கும் அனுமதி கொடுத்தால், மனோஇச்சைகளை பின்பற்றும் தீய உலமாக்கள்,தங்களது ஏதேனும் பத்வாவை பிரபல்யமான முஜ்தஹிதின் பக்கம் இணைத்து விடுவார்.இந்த விஷயம் இன்னாரிடமிருந்து உறுதியாகி உள்ளது என கூறிவிடுவார்.எனவேதான் எந்த இமாமின் சொற்களை ஆராய்வதில்,விளக்குவதில் பெரும்பாலான உலமாக்கள் ஈடுபட்டு இருக்கிறார்களோ, அவரின் மத்ஹபை அமல்செய்வதில் இந்த அபாயம் இல்லை.ஆனால்,ஒரு முஜ்தஹிதின் விஷயத்தில் இது போன்ற சூழ்நிலை இல்லையெனில் அங்கு அபாயம் உண்டு.(அதாவது அந்த முஜ்தஹிதின் கருத்திற்கு தவறான விளக்கத்தை கூறி மனோ இச்சைக்கு ஏற்ப முடிவுகளை தீய உலமாக்கள் எடுத்துவிடுவார்கள்)
(ஆதாரம்:இக்துல் ஜீத் பக்கம்:31,33)