உளுவிற்கு நிய்யத் அவசியமில்லை என்பது ஹனபி மத்ஹபின் நிலைப்பாடாகும்.இதனை குறித்து விமர்சிக்கப்படுகிறது.நிய்யத் அவசியம் என்பது ஒன்றுபட்ட கருத்து என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.எனினும், இந்த மஸ்அலா கருத்துவேறுபாடு கொண்டது.ஆனாலும் நிய்யத் அவசியமில்லை என்பதுதான் ஹனபி மத்ஹபில் முன்னுரிமை தரப்படும் கருத்தாக உள்ளது.
மத்ஹப் மறுப்பாளர்களின் வாதம்
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நமது பதில்:
ஹதீஸில் அமல்கள் என்பதில் அனைத்து அமல்களும் உள்ளடங்கும் என்று கூறினால் கொடுக்கல்,வாங்கல், குடும்ப வாழ்க்கை, வியாபாரம் போன்றவைகளும் அமல்கள் தான்.இவைகளில் ஒன்றுபட்ட கருத்தின்பேரில் நிய்யத் கடமையில்லை.எனவே அமல்கள் என்பதில் அனைத்து அமல்களும் உள்ளடங்காது என்பதுதான் பொருத்தமானது.ஆதாரத்தின் பேரில் சில அமல்கள் நிய்யத் இல்லாமலும் கூடும் என்பது விதிவிலக்காகும் என்பதை மத்ஹப் மறுப்பாளர்களும் ஏற்றுள்ளனர்.எனவே நாமும் ஆதாரத்தின் பேரில் உளு,குளிப்பை விதிவிலக்காக கருதுகிறோம்.
இந்த ஹதீஸின் கருத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முன்னுரிமையான சரியான கருத்து என்னவெனில் அனைத்து அமல்களில் நன்மைக்கு அடிப்படை அஸ்திவாரம் நிய்யத்துதான்.
இதற்கான ஆதாரம் ஹதீஸின் பிற்பகுதியில் வரும் வாசகம்
فمن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها هجرته ما هاجر إليه ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தை அடைவது நோக்கமாக அல்லது பெண்ணை மணப்பது நோக்கமாக இருந்தால் அவரின் ஹிஜ்ரத் அதனின் பால் இருக்கும். (புகாரி)
எனவே ஹதீஸின் நோக்கமானது ஹிஜ்ரத்திற்கு நன்மை கிடைக்காது என்பது தான்.மாறாக ஹிஜ்ரத் நிறைவேறாது என்பதில்லை.இந்த ஹதீஸின் பிண்ணனியை ஆராய்ந்தால் இதுதான் சரியானது என்பதை புரிய முடியும்.ஒரு நபர் பெண்ணை நிக்காஹ் செய்வதின் பேரில் ஹிஜ்ரத் செய்தார் எனும் செய்தி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்த போது பெருமானார் அவர்கள் உரையாற்றினார்.அதில் இந்த ஹதீஸை நவின்றார்கள்.
(ஆதாரம்:தப்ரானி ஃபில் முஃஜமில் கபீர்)
இஸ்லாத்தில் ஹிஜ்ரத் என்பது கடமையாக இருந்தது.அனைத்து அமல்கள் நிறைவேறுவதற்கு நிய்யத் என்பது நிபந்தனையாக இருந்தால் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமது ஹிஜ்ரத் நிறைவேறவில்லை என்பதாக ஏன் கூறவில்லை? உமது கடமை நிறைவேறவில்லை.மக்கா திரும்ப சென்று மீண்டும் ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்பதாக ஏன் கூறவில்லை?
இந்த ஹதீஸை குறித்து புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களின் கருத்துக்கள்
1)இமாம் அபூ ஜஃபர் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:الأعمال بالنيات و إنما لكل امرى ما نوى يريد من الثواب இதன் மூலம் நன்மை என்பது தான் கருத்தாகும்.(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 3/96, ஹதீஸ் இலக்கம்:4651)
2)அபூபக்கர் ஜஸ்ஸாஸ் ராஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:و احتمل أن يراد به فضيلة العمل இந்த ஹதீஸின் மூலம் அமல்களுக்குரிய சிறப்பு எனும் கருதுவதற்கு வாய்ப்புண்டு.(ஆதாரம்:ஷர்ஹு முஹ்தஸர் தஹாவி 1/307)
3)அல்லாமா அய்னி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: قوله و لكل امرء ما نوى يدل على الثواب و الاجر நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் ஒவ்வொருவருக்கும் அவன் எண்ணியதை கிடைக்கும் என்பதானது நன்மை,கூலி உண்டு என்பதை அறிவிக்கிறது.(ஆதாரம்:உம்ததுல் காரி 1/30)
4)இமாம் இப்னு ஹுமாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:إذا لم ينو حتى لم تقع عبادة سببا لثواب நிய்யத் இல்லையெனில் உளுவில் கிடைக்கும் நன்மைக்கு காரணமாக அமையாது.(ஆதாரம்: பத்ஹுல் கதீர் 1/32) பிறகு நிய்யத்தின்றி உளு நிறைவேறும் என்பதாக தெளிவுப்படுத்தி கூறியுள்ளார்கள்.
5)ஷம்சுல் அயிம்மா இமாம் ஸர்கஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:فإن المراد أن ثواب العمل بحسب அமலுக்குரிய நன்மையானது நிய்யத்தை பொறுத்துதான் அமைந்துள்ளது.
6)அல்லாமா அன்வர்ஷாஹ் கஷ்மீரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வணக்கங்கள் சரியாகுவதற்கு நிய்யத்துதான் அடிப்படையாக உள்ளது.எனவே நிய்யத்து இல்லையெனில் வணக்கமானது நன்மையை விட்டும் நீங்கிவிடும்.
(ஆதாரம்:பைளுல் பாரி 1/81)
முன்சென்ற மார்க்க அறிஞர்களின் ஒரு சாராரிடத்தில் வணக்கங்களில் நன்மைக்கு அடிப்படையானது நிய்யத்தின் பேரிலாகும்.இதுதான் சரியாகும்.ஒருவர் உளு செய்கிறார்.எனினும் அதனை நிய்யத்து செய்யவில்லையானால் நன்மை கிடைக்காது.எனினும் தூய்மையாகிவிடுவார்.
உதாரணமாக ஒருவர் தனது ஆடையை சுத்தப்படுத்தும் போது தொழுவதற்காக என நிய்யத் செய்கிறார்.அவரின் நல்ல நிய்யத்தின் பேரில் நன்மை கிடைக்கும்.எனினும் நிய்யத்தின்றி ஆடையை சுத்தப்படுத்தினால் நன்மை கிடைக்காது.எனினும், ஆடை தூய்மையாகிவிடும் என்பதில் அனைவரும் ஒன்றுப்பட்டுள்ளோம்.இவ்வாறே நாமும் கூறுகிறோம் உளுவில் நிய்யத் செய்யவேண்டும்.எனினும் ஒருவர் நிய்யத் செய்யவில்லையானால் உளு கூடிவிடும்.ஏனெனில் தண்ணீரின் அசலான தன்மையானது தூய்மைப்படுத்துவதாகும்.
வணக்கங்கள் நிய்யத்தின் பேரில் தான் அமைந்துள்ளது எனும் ஹதீஸை முன்வைத்து உளுவிற்கு நிய்யத் அவசியம் என்பதாக வாதிட்டால் நமது கேள்வி என்னவெனில் ஹதீஸில் வந்துள்ள வாசகம் அனைத்து அமல்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதாகத்தான் வந்துள்ளது.எனவே ஒருவரின் ஆடையில் அசுத்தம் பட்டுவிட்டால் அதனை சுத்தப்படுத்துபவர் நிய்யத் செய்யவில்லையானால் ஆடையானது சுத்தமாகுமா? ஆகாதா?
தண்ணீர் ஆடையை சுத்தப்படுத்துவதில் நிய்யத்திற்கு வேலை இல்லை.தண்ணீரின் அசலான தன்மை சுத்தப்படுத்துவதாகும்.
முக்கியமான அடிப்படை:உளுவில் நிய்யத்து கடமை என்பதாக ஏற்றால் தண்ணீரானது தூய்மைப்படுத்தும் தன்மையானது நிய்யத்தின் பேரில் அமைந்துவிடும்.நிய்யத் இருந்தால் தூய்மைப்படுத்தும் இல்லையெனில் தூய்மைப்படுத்தாது.இந்த விஷயமானது ஆதாரம்,அறிவிற்கு எதிரானது.ஏனெனில் அல்லாஹ்தஆலா கூறுகிறான் و أنزلنا من السماء ماء طهور வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் பொழியச்செய்கிறோம்.(அல்குர்ஆன்)
உம்முஸலமா (ரளி) அவர்கள் கடமையான குளிப்பை குறித்து கேள்வி கேட்டபோது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:إنما يكفيك ان تحثين على راسك ثلاث حثيات من ماء ثم تفضين عليك الماء فتطهرين உனது தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்று.பிறகு உடலில் தண்ணீர் ஊற்று தூய்மையாகிவிடுவாய்.(இது) உனக்கு போதுமாகும்.(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் எண்:246)
இமாம் இப்னு குஜைமா ,இமாம் இப்னு ஹிப்பான்,இமாம் பஙவி,இமாம் இப்னுல் ஜாரூத், அபூஅவானா போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என கூறியுள்ளனர்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தூய்மைப்படுத்துவதற்கு தண்ணீரை ஊற்றுவதை போதுமானது என்பதாக கூறியுள்ளார்கள்.மாறாக நிய்யத் குறித்து எது ஒன்றும் கூறவில்லை.எனவே தூய்மையாகுவதற்கு நிய்யத் அவசியமில்லை என்பது புரிகிறது.
இமாம் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ما أصابه الماء من مواضع الطهور فقد طهر உளுவின் உறுப்புகளில் தண்ணீர் முழுமையாக பட்டுவிட்டால் தூய்மையாகிவிடும்.
இவ்வாறே இமாம் முஹம்மது அலி இப்னு ஹுஸைன் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:حدثنا ابن المبارك عن معمر عن زيد بن اسلم قال سمعت على بن حسين يقول ما أصاب الماء منك و انت جنب فقد طهر ذلك لمكان குளிப்பு கடமையான நிலையில் உனது உடலின் பகுதியில் தண்ணீர் பட்டுவிட்டால் அந்த இடத்தில் தூய்மையாகிவிடுவார்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா ஹதீஸ் இலக்கம்:452 அறிவிப்பாளர் தொடர் சரியானது)
சுருக்கம் என்னவெனில் குர்ஆன் வசனமும், பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களும்,இமாம்களும் உடலை சுத்தப்படுத்தும் வழிமுறையை கூறியுள்ளனர்.எனினும் நிய்யத் குறித்து எது ஒன்றும் கூறவில்லை.எனவே உளு,குளிப்பு போன்ற காரியங்களில் நிய்யத் பர்ளு இல்லை.
மத்ஹப் மறுப்பாளர்களிடத்தில் நமது வாதம் ஒருவரின் வீட்டில் நாய் நுழைந்து பாத்திரத்தில் வாய்வைத்து விட்டது.நிய்யத் இன்றி அதனை கழுவினால் தூய்மையாகுமா?
துய்மையாகாது எனில் அல்லாஹுத்தஆலா தண்ணீரை எந்த ஒரு நிபந்தனையுமின்றி தூய்மைப்படுத்தும் என்பதாக ஏன் கூறியுள்ளான்? தூய்மையாகும் எனில் இவ்வாறே நிய்யத் இன்றி உளுவும் நிறைவேறும்.இன்ஷா அல்லாஹ் தொடரும்