Thursday, November 5, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? 
(ஓர் ஆய்வு தொடர்:6) 


பெண்கள்(பள்ளிவாசலுடன் ஒப்பிடும்போது)வீட்டில் தொழுவது மிக சிறந்தது

ஆதாரம்:(1)

இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عن النبي صلى الله عليه و سلم قال : صلاة المرأة في بيتها افضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها افضل من صلاتها في بيتها 

ஒரு பெண் அவளுடைய (பொது) 
அறையில் தொழுவதை விட அவளுடைய (தனி)  வீட்டில் தொழுவது  சிறந்ததாகும்.  மேலும் அவளுடைய(தனி) வீட்டில் தொழுவதை விட அவளுடைய (தனி)அறையில் தொழுவது சிறந்ததாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஸ்தத்ரகுல் ஹாகிம் மஅ தல்ஹீஸி லித்தஹபி 1/328,ஹதீஸ் இலக்கம்:757,இமாம் ஹாகிம் (ரஹ்),இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.)

 மேற்படி  ஹதீஸில் பெண்களின் சிறந்த பள்ளிவாசல்  அவர்களின் வீடு என்றும்,அதிலும்  அவ்வீட்டிலுள்ள அவளின் தனி அறை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது மிக கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஆதாரம்:(2)

உம்முல் முஃமீன் உம்மு ஸலமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 قالت قال رسول الله صلی الله عليه و سلم صلاة المرأة في بيتها خير من صلاتها في حجرتها وصلاتها في حجرتها خير من صلاتها فدارها وصلاتها في دارها خير من صلاتهافی مسجد قومه 

பெண் தனது வீட்டின் (தனியான) சிறிய அறையில் தொழுவது வீட்டின் பெரிய அறையில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பெரிய அறையில் தொழுவது வீட்டின் உள்முற்றத்தில் தொழுவதை விட சிறந்தது.உள்முற்றத்தில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட சிறந்தது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி ,தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/135,இமாம் முன்திரி ரஹ் அவர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் என்கிறார்கள்.)

ஆதாரம்:(3)

இதே அறிவிப்பு வார்த்தை மாற்றங்களுடன் ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم صلاة المرأة في بيتها  خير من صلاتها فى حجرتها  فيحجرتها خير من صلاتها في دارها وصلاتها فى دارها خير من صلاتها فى ماوراءذلک 

பெண் தனி வீட்டில் தொழுவது தனியறையில் தொழுவதை விட சிறந்தது.தனியறையில் தொழுவது வீட்டின் பொதுவில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுவில் தொழுவது அதற்கு பின்னால்(திண்ணை,பள்ளிவாசலில்) தொழுவதை விட சிறந்ததது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:அத்தம்ஹீத் லி இப்னு அப்துல்பர் 23/401)


ஆதாரம்:(4)

இப்னு உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد و بيوتهن خير لهن 

பெண்களை பள்ளிவாசலை விட்டு தடுக்காதீர்.எனினும், அவர்களின் வீடுதான் (தொழுவதற்கு) மிகச்சிறந்தது என  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:முஸ்தத்ரகுல் ஹாகிம் மஅ தல்ஹீஸி லித்தஹபி 1/327,ஹதீஸ் இலக்கம்:755,இமாம் தஹபி ரஹ் இமாம் ஹாகிம் ரஹ் அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்கிறார்கள்.)


ஆதாரம்:(5)

மற்றோர் அறிவிப்பில் வருகிறது

انهالاتكون اقرب الى الله منها فی قعر بیتها

பெண் தனது வீட்டின் ஆழமான ஓரப்பகுதியில் இருக்கும் போது அல்லாஹ்விற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாள் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

(ஆதாரம்:அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி ,இமாம் முன்திரி ரஹ் அவர்கள்,இமாம் ஹைஸமி ரஹ் அவர்கள் இதனின் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்பதாக கூறுகிறார்கள்.அத்தர்ஙீப் வத்தர்ஹுப் 1/141,முஃஜமுஜ்ஜவாயித் ஹதீஸ் இலக்கம்:7671)

ஆதாரம்:(6)

عن النبي صلى الله عليه وسلم قال ان احب صلاة تصليها المرأة الى الله في اشد مكان في بيتهاظلمة

அல்லாஹ்விடம் மிகவும் பிரியமான பெண்மணி இருளான அறையில் தொழுபவள் (அதாவது முழுமையாக மறைக்கும் விதமாக ஆழமான ஓரப்பகுதியில் தொழுபவள்) என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

(ஆதாரம்:இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம்:1691,இதனை இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்கிறார்.இந்த அறிவிப்பு மவ்கூபாகவும் வந்துள்ளது.இதனின் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.இமாம் ஜைனுத்தீன் மனாவி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை ஹஸன் (ஏற்கத்தகுந்த) தரத்தில் உள்ளது என்கிறார்.இமாம் முன்திரி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை குறித்து மெளனமாக இருக்கிறார்கள்.
(ஆதாரம்:முஃஜமுஜ்ஜவாயித் 2115,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் 1/136,அத்தய்ஸீர் லில்மனாவி 2/352)

தெளிவான விளக்கம்:

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வான வழிகாட்டுதல்கள் நமக்கு மிக தெளிவாக உள்ளது.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களை பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதி அளித்ததுடன் பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்பதைதான் ஆர்வப்படுத்தினார்கள்.ஏனெனில் வீட்டில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட பலமடங்கு சிறந்தது.இதனைதான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறினார்கள்.மேலும் வீட்டில் தொழுவது அந்தஸ்தில் உயர்ந்தது என்பது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை  இந்த ஆய்வின் ஆரம்பத்தில் கூறியுள்ளோம்.இதனையும் புரியவேண்டும்.பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவது பர்ளு,வாஜிபு, சுன்னத் இல்லை.மாறாக நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் உம்மு ஹுமைத் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னால் ஜமாஅத்தாக தொழுவதை விரும்பினார்கள்.எனினும்,
அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு பிறகு மரணம் வரை வீட்டிலே தொழுதார்கள்.

"انها جاءت النبي صلى الله عليه وسلم  فقالت : يارسول لاني أحب الصلاة
معک قال : قد علمت انك تحبين الصلاة معی، و صلاتك فی بیتك خیرلك من صلاتك فی حجرتك و صلاتك فی حجرتك خیر من صلاتك في دارك وصلاتك فی دارك خير من صلاتك في مسجد قومك صلاتك فى مسجد قومك خير من صلاتك فى مسجدي " لقيت الله عزوجل
قال فامرت فبنی لهامسجد فى اقصی شئ من بيتها و اظلمه فكانت تصلي فيه حتی 

‘அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரளி)  அவர்களின் மனைவி உம்மு ஹுமைத்  (ரளி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்  வந்து; அல்லாஹ்வின் தூதர்அவர்களே!  நிச்சயமாக நான் உங்களுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறேன் .என்றுகூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்;நிச்சயமாக நீங்கள் என்னுடன்  தொழுவதற்கு பிரியப்படுகிறீர்கள்  என்பதை நான்அறிந்துள்ளேன்.  எனினும் என்னுடைய பள்ளியில்நீங்கள் தொழுவதை விட உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவது உங்களுக்கு சிறந்ததாகும்.  மேலும் உங்களுடைய சமுதாயத்தின் பள்ளியில் நீங்கள் தொழுவதை விடஉங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவதுஉங்களுக்கு  சிறந்ததாகும். மேலும் உங்களுடைய (பொது) வீட்டில் நீங்கள் தொழுவதை விடஉங்களுடைய அறையில் நீங்கள்  தொழுவது சிறந்ததாகும்.  உங்களுடைய அறையில் நீங்கள் தொழுவதை விட உங்களுடைய (தனி)  வீட்டில் நீங்கள் தொழுவது  உங்களுக்கு சிறந்ததாகும் என்று கூறினார்கள்.  எனவே உம்மு ஹுமைத் (ரளி)அவர்கள்  (அவரது வீட்டில் தொழுவதற்கென தனி இடம் கட்டுவதற்கு) உத்தரவிட்டார்கள்.  எனவே அவரது வீட்டின் மிக  ஓரப்பகுதியில், இன்னும் மிக இருளான பகுதியில் அவர்களுக் கென்று தொழுமிடம் கட்டப்பட்டது.  அல்லாஹ்வை சந்திக்கும் வரை அப்பெண்மணி அதில் தான் தொழக்கூடியவர்களாக  இருந்தார்கள்.

(ஆதாரம்:அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு  ஸுவைத்(ரளி), நூல் : அஹ்மது 27090, இப்னு ஹுசைமா1689, இப்னு ஹிப்பான் 2217)

இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்களின் தீர்ப்பு 

صلاتها فى مسجد قومها على صلاتها فى مسجد النبي صلى الله عليه وسلم 

பெண் தனது மஹல்லா பள்ளியில் தொழுவது மஸ்ஜிது நபவியில் தொழுவதை விட சிறந்தது.

கேள்வியும் பதிலும்:
மஸ்ஜித் ஹராம்,மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது என்பதாக வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.எனவே பெண்களுக்கு எது சிறந்தது?

பதில்:இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:எனது பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவி) நிறைவேற்றப்படும் தொழுகை மற்ற பள்ளிகளின் 1000 தொழுகைகளை விட சிறந்தது என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இங்கு அண்ணலார் அவர்கள்  கூறுவது ஆண்களை குறித்தாகும்.பெண்களுக்குரியது இல்லை.

விளக்கம்: பெண்கள் வீட்டில் தொழுவது மஸ்ஜிதுந்நபவியில் தொழுவதை விட சிறந்தது.அதிகமான நன்மைக்குரியதாக இருக்கும் போது குழப்பமான காலகட்டத்தில் பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்? மேலும் பெண்கள் பள்ளிக்கு வந்துதான் தொழகவேண்டும் என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவும் பிறப்பக்கவில்லை.இதற்கு நேர்மாறாக பெண்களை வீட்டில் தொழும்படிதான் அண்ணலார் அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

முக்கிய குறிப்பு:உம்மு ஹுமைத் (ரளி) அவர்களின் நிகழ்வை மற்றோரு அறிவிப்பில் வரும் வாசகத்தை ஊன்றி கவனித்தால் நன்றாக புரியமுடியும்.(இந்த அறிவிப்பை ஆரம்பத்தில் பார்த்துள்ளோம்)
يمنعنا أزواجنا أن نصلي معك .............
எமது கணவர் உங்களுடன் ஜமாஅத்தாக தொழுவதை தடுக்கிறார்.எனினும்,நிச்சயமாக நான் உங்களுடன் தொழுவதற்கு பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹுமைத் அவர்களின் கணவரை எச்சரிப்பதற்கு, கண்டிப்பதற்கு பதிலாக அந்தப் பெண்மணியை வீட்டில் தொழும்படி அறிவுறுத்துகிறார்கள்.பெண்களை பள்ளிவாசலை விட்டு தடுப்பது தடையில்லை என்பதை தான் அண்ணலாரின் மெளனம் எடுத்துக்காட்டுகிறது.

குறுக்கு கேள்வி 

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு எளிமையான திருமணத்தில் பரக்கத் இருப்பதாக ஹதீஸில் வருகிறது.எனவே எளிமையான திருமணம் செய்வது சிறப்பு.சிறந்ததை நோக்கித்தான் பயணிக்க வேண்டும்.நாம் சிறந்த செயலை செய்யவேண்டியதாக இருக்கவேண்டும்.எனினும் ஆடம்பரமாக செய்வது ஹராமில்லை.அதனை தடுக்கமுடியாது.எனினும்,சிறந்ததை எடுத்து நடக்கவேண்டும்.(இது குறித்த link:https://youtu.be/9Spe6wFBzqg)

எளிய திருமணத்தின் அளவுகோல் வீட்டில் திருமணம் நடப்பது.எனவே வீட்டில் திருமணம் நடந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேச்சாளர்களும் வருவார்கள்.நிக்காஹ் பதிவுபத்திரமும் தரப்படும்.ஆனால் மண்டபத்தில்  நிக்காஹ் நடந்தால் பதிவுபத்திரம் மட்டும் தரப்படும்.பேச்சாளர்கள் வரமாட்டார்கள்.
(நாம் இது குறித்து படித்துள்ளோம்.எனினும்,
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.இன்ஷா அல்லாஹ் கிடைத்தால் அதனை இணைக்கிறோம்)

நமது வாதம்:பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி உண்டு.எனினும் சிறந்தது இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
பிறகு ஏன் அதனை ஆர்வமூட்டுவதில்லை?வலியுறுத்துவதில்லை? எளிய திருமணம் சிறந்தது என்பதற்கு மேடை போட்டு முழங்குபவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது சிறந்தது என்பதற்கு மேடை போட்டு ஏன் முழங்குவதில்லை? சிறந்த செயலை செய்யவேண்டும்.சிறந்ததை நோக்கிதான் பயணிக்க வேண்டும் என்பதாக வாதிடுபவர்கள் எளிய திருமணத்தில் ஒரு நிலைப்பாடு.பெண்கள் பள்ளிக்கு செல்வதில் மற்றோரு நிலைப்பாடு ஏன்? 

விமர்சனமும் தெளிவும் 

பெண்கள் ஷாப்பிங் மால்,கடைவீதி,மதரஸா, ஸ்கூல் போன்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.இதனை குறித்து ஏன் விமர்சிப்பதில்லை?இது குறித்து ஏன் பத்வா கொடுக்கவில்லை?அங்கு பெண்களுக்கு குழப்பம் நடப்பது கண்களுக்கு தெரியவில்லையா? ஆனால் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது மட்டும் கண்களுக்கு தெரிகிறதா? பள்ளிவாசலுக்கு செல்வதை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?

தெளிவு: பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை தடுக்கிறோம் எனில் அவர்கள் வீடுகளில் தொழமுடியும்.மேலும் அவர்களுக்கு வீட்டில் தொழுவது பள்ளியில் தொழுவதை விட சிறந்தது.ஆனால், பெண்கள் மதரஸா, பள்ளிக்கூடம் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு.ஏனெனில் உலக அல்லது மார்க்க கல்வியை வீட்டில் இருந்து கற்பது சிரமம்.எனவே தேவையைக் கருதி மதரஸா அல்லது பள்ளிக்கூடம் செல்வதற்கு அனுமதி உண்டு.எனினும்,பெண்களுக்கு கல்விக்கு தனியானதொரு ஏற்பாடு இருக்கவேண்டும்.ஆக, பெண்கள் எந்த வேலையை வீட்டில் செய்ய இயலுமோ அதனை அங்குதான் செய்யவேண்டும்.அதற்காக வெளியே செல்வது தடையாகும்.எனினும்,வீட்டில் செய்ய இயலாத வேலை அல்லது தேவையான காரியத்திற்கு வீட்டை விட்டு வெளியேறுவது கூடும்.










No comments:

Post a Comment