Friday, December 17, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 இமாம்கள் தங்களை பின்பற்றுவதை தடுத்தார்களா?தொடர்:18  


இமாம்கள் குறிப்பாக கூறியுள்ளார்கள்:சரியான ஹதீஸ்கள் தான் எனது வழிமுறை 

இந்த வாதங்கள் அனைத்தும் பொய்யானதும் அசத்தியமானதுமாகும்.எதார்த்தம் என்னவெனில் முஜ்தஹித்களான இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை தடுத்தது முஜ்தஹித்களை தான்.ஏனெனில் அவர்கள் குர்ஆன்,ஹதீஸை நேரடியாக  அணுகி ஆய்வு செய்யும் திறமை பெற்றிருந்தார்கள்.மாறாக, ஆய்வு செய்யும் திறன் இல்லாதவர்களை தடுக்கவில்லை.

ஏராளமான நூல்களை நான்கு இமாம்களும், அவர்களின் மாணவர்களும் ஏன் எழுதவேண்டும்? அனைத்து ஆய்வுரீதியான கிளைசட்டங்களை தொகுத்து ஏன் ஒன்றுசேர்க்க வேண்டும்? பர்ளு,வாஜிப்,சுன்னத்,நபில்,

முஸ்தஹப் போன்ற ஏராளமான மஸாயில்களை தொகுக்க வேண்டும்.ஏனெனில் பின்னால் வருபவர்கள் எளிதாக குர்ஆன்,சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக தடுத்திருந்தால்,இமாம்களிடத்தில் பொதுமக்கள் மார்க்க சட்டத்தை கேட்கும்போது நீங்களே ஆய்வு செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கவேண்டும்.ஆனால்,

அவர்களின் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மஸாயில்களை குறித்து கேட்கும்போது, ஆதாரங்களை கூறாமல் சட்டத்தை மட்டும் கூறிய ஏராளமான நிகழ்வுகள் உண்டு.எனவே இமாம்கள் தக்லீதை தடுத்தது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.

இமாம் அபியூசுப் (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்:

لأن على العامى الاقتداء بالفقهاء لعدم الاهتداء فى حقه إلى معرفة الأحاديث 

மார்க்க விற்பன்னர்களை, (புகஹாக்களை) பின்பற்றுவது சாமானிய மக்களின் மீது கடமையாகும்.ஏனெனில் அவர்களுக்கு ஹதீஸ்கள் குறித்து ஞானத்தை பெற்றுக்கொள்ளும் சரியான வழிமுறையை அடையும் தகுதி இல்லை.(ஆதாரம்:ஹிதாயா 1/226,தலைப்பு:ما يوجب القضاء و الكفارة)

 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடமிருந்து  அல்லாமா இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் எடுத்தெழுதுகிறார்கள்:  இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள்,அபூஉபைதா (ரஹ்) அவர்கள்,அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்,முஸ்அப் (ரஹ்) போன்றவர்கள் சட்டங்களை தெரிந்துகொள்வதற்கு (இமாம்களை) அணுகும்படி கூறினார்கள்.தனது தோழர்களில் அபூதாவூத் (ரஹ்),உஸ்மான் இப்னு ஸயீத் (ரஹ்),இப்ராஹிம் ஹர்பி (ரஹ்), அபூபக்கர் அஸ்ரம் (ரஹ்),அபூஜுர்ஆ (ரஹ்),அபூஹாதம் (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) போன்றவர்களை (பிறரை) தக்லீத் செய்வதிலிருந்து தடுத்தார்கள்.அசலான குர்ஆன்,சுன்னாவின் பக்கம் திரும்புவது கடமை என்பதாக அவர்களிடத்தில் கூறினார்கள்.(பதாவா இப்னு தைய்மிய்யா 2/24) 

 இமாம்கள்,தக்லீத் செய்யக்கூடாது என்பதாக  யாரை தடுத்துள்ளார்கள்? என்பதை புரிய முடிகிறது.ஹதீஸ்கலை வல்லுநர்களாக,புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களாக இருப்போரை தான் தடுத்துள்ளார்கள்.ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் இமாமை அணுகி மார்க்க சட்டங்களை குறித்து கேட்டு அமல் செய்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அனைவரையும்  தக்லீதை விட்டு தடுக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று

அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களும்,

ஸஹாபாக்கள்,தாபியீன்களின் கருத்துவேறுபாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட நூல்கள் இருந்தாலும் விரும்பியபடி அமல்செய்வது,நாடுவதை அமல்செய்வது கூடாது.ஆதலால் எவரின் சொல்லை எடுக்க விரும்பினால்,சரியானதை அமல்செய்வதற்கு மார்க்க அறிஞர்களை அணுகி தெரிந்து கொள்ளும் வரை அதனை அமல்செய்வது கூடாது.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன்)

கண்ணியத்திற்குரிய பேரறிஞர் அபுல் ஹஸன் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடத்தில்,இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்;அபுல் ஹஸன்!எந்த மஸ்அலாவில் உம்முடைய கருத்தில் எந்த ஒரு இமாமும் இல்லையெனில் அதில் எப்போதும் விவாதிப்பதை தவிர்த்துக்கொள்! (ஆதாரம்:மனாகிபுல் இமாம் அஹ்மத் பக்கம்:871,ஸியரு அஃலாமின் நுபலா 11/692)

இக்காலத்தின் குழப்பங்களில் மிகவும் அபாயகரமான குழப்பம் இஸ்லாமியர்களில் சாமானியர்களை குறிப்பாக இளைஞர்களை வார்த்தை ஜாலங்களால்,கவர்ச்சியான வாதங்களால்,தவறான ஊசலாட்டங்களால் அவர்களின் உள்ளத்தில் மத்ஹபுகளுக்கு எதிரான சிந்தனையை திணித்து,அவைகளை விட்டுவிடுவதை வலியுறுத்துவது.இதன்பிறகு அப்பாவி மக்கள் மனம்போன போக்கில் வாழ்வை கழிப்பார்கள். எந்த ஒரு திறமையான முஜ்தஹிதை (ஆய்வாளரை) பின்பற்றும் தேவையில்லை.அதுமட்டுமின்றி  முன்னோர்களை தக்லீத் செய்வது,பின்தொடர்வது குற்றம் பாவம் என்பதாக சித்தரிப்பார்கள்.மார்க்கத்தை குறித்து அறியாதவரும் கூட இமாம்களின் குர்ஆன்,ஹதீஸின் விளக்கத்தை ஏற்பதில்லை.ஆனால்,அவர்களின் இயக்கத்தின் தலைவர்களின் விளக்கத்தை,ஆய்வை வஹியாக கருதி கண்மூடித்தனமாக தலைமீது வைத்து கொண்டாடி வருகின்றனர்.இதனையே நேர்வழி என்பதாக கருதி வருகின்றனர்.இதனை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.

ஆக,இமாம்களின் கூற்றுக்களை நுனிப்புல் போல் மேய்கின்றனர் அல்லது திட்டமிட்டு திரித்து கூறிகின்றனர்.

அடுத்து, சரியான ஹதீஸ்களே எனது வழிமுறை எனும் இமாம்களின் கூற்றுகளின் உண்மையான விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது நூலான கிதாபுல் மஜ்மூஃவின் முன்னுரையில் இதற்கு பதில் தருகிறார்கள்.

هذا الذي قاله الشافعى ليس معناه أن كل واحد رأى حديثًا صحيحًا قال: هذا مذهب الشافعي، وعمل بظاهره وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب

இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறிய "ஸஹீஹான ஹதீஸ் எனது வழிமுறை" என்பதற்குரிய விளக்கத்தை இவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது.அதாவது "ஒவ்வொரு நபரும் ஸஹீஹான ஹதீஸை பார்த்தால் இதுதான் ஷாபியி ரஹ் அவர்களின் வழிமுறை என்பதாக எண்ணி அமல் செய்வது"(கூடாது).மாறாக, இமாமின் சொல்லின் சரியான கருத்து "மத்ஹபில் ஆய்வு செய்யும் திறன்பெற்றவருக்கு உரிய வழிகாட்டுதலாகும்".

     இமாம்களின் இந்த சொல்லை பொதுவாக அறிவித்தால் பெரும் அழிவில்தான் கொண்டு சேர்க்கும்.இதற்கு ஏராளமான சான்றுகளை கூறமுடியும்.உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை மட்டும் பார்ப்போம்.

1)ரமளானில் இரத்தம் குத்தி எடுத்த மனிதரை கடந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது கூறினார்கள்;

افطر الحاكم و المحجوم 

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி),திர்மிதி ,அபூதாவூத் போன்ற ஹதீஸ்களில் வருகிறது.

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பார்த்து சாமானியர் அமல் செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

2)இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயம், மலை இல்லாமலும் லுஹர், அசருக்கிடையிலும், மக்Gரிப், இஷாக்கிடையிலும் சேர்த்து தொழுதுள்ளார்கள்.’  (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் வெளிப்படையான கருத்தை முன்வைத்து தக்க காரணமின்றி தொழுகையை ஜம்உ செய்ய ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்?

3)அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا وضوء الا من صوت او ريح 

உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை உளு (செய்யும் அவசியம்) இல்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.(ஆதாரம்:திர்மிதி)

வெளிப்படையான ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

4)புகாரியில் வரும் ஹதீஸ்

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.(ஹதீஸ் இலக்கம்:2057)

வெளிப்படையான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்? 

ஆகவே,"ஸஹீஹான ஹதீஸ்கள் எமது வழிமுறை" எனும் இமாம்களின் சொல்லை பொதுவாக புரிந்து கொள்வது கூடாது.

No comments:

Post a Comment