Monday, December 17, 2018

ஹனபி பிக்ஹ் ஹிதாயா நூலும் நமது பதிலும் 3


ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் தொடர் 3

முதல் குற்றச்சாட்டின் இரண்டாவது பகுதி ஹிதாயா நூலில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.

இதற்கு  இருவிதமாக பதில் அளிக்கிறோம்.

முதல் பகுதியில் ஹிதாயா நூல் அதனின் ஆசிரியர் குறித்து அறிமுகம் இதன் மூலம் சரியான தெளிவு கிடைத்துவிடும்.அந்நூலின் மேன்மையும் சிறப்பும் புரிந்துவிடும்.

இரண்டாவது பகுதியில் மத்ஹப் மறுப்பாளர்கள் வாயடைக்கும் பதில், தக்க பதிலடி,இரட்டை நிலைப்பாட்டை தோலுரிப்போம்.

ஹிதாயா நூல்,ஆசிரியர்  குறித்து சிறு அறிமுகம்:

ஹிதாயா நூலின் தனிச்சிறப்பு


பிக்ஹ் ஹனஃபியில் ஹிதாயா நூலானது மிகவும் பிரபல்யமானது, நம்பகமானது.இரத்தின சுருக்கமான நூல்.இரத்தின சுருக்கம்,அதிக மார்க்க சட்டங்கள்,அழகிய கோர்வை,தனித்து விளங்கும் போங்கின் காரணமாக தனிச்சிறப்பு பெற்று விளங்குவது அதனின் குறிப்பான அம்சமாக திகழ்கிறது.இதனால்தான் நூற்றாண்டுகளாக இந்தியாவின் மதரஸாக்களில் அலங்காரமாக திகழ்கிறது.அதுமட்டுமின்றி மத்ஹப் மறுப்பாளர்களின் பாடத்திட்டத்திலும் இந்நூல் இடம்பிடித்துள்ளது வியப்பில் ஆழ்த்துகிறது.


ஹிதாயா நூல் அசலில் 'பிதாயதுல் முப்ததியின்' (بداية المبتدي) விளக்கவுரை, விரிவுரை நூலாகும்.ஹிதாயா ஆசிரியர் முதலில் 'பிதாயதுல் முப்ததி' என்ற பெயரில் தொகுத்தார்.பிறகு அதனின் விளக்கவுரையாக 'கிபாயதுல் முன்தஹா' (كفاية المنتهي) என்ற பெயரில் 80 பாகங்களில் எழுதினார்.விரிவுரை நீண்டுவிட்டது.எனவே அதனை சுருக்கி எழுதுவதில் கவனம் செலுத்தினார்.அதற்கு ஹிதாயா பெயர் சூட்டினார்.இது நான்கு பாகங்கள் கொண்டது.முதல் இரு  பாகங்கள் 'அவ்வலைன்' (اولين) என்றும்,அடுத்த  இரு பாகங்கள் ஆகிரைன் (آخرین ) என்றும் சொல்லப்படும்.

ஹிதாயா நூலின் உள்ளடக்கம்

ஹிதாயா நூலில் ஆசிரியர்,
அசல் எனும் மூலத்தை 'குதூரி' (مختصر القدوري)  நூலில் இருந்து எடுத்தெழுதியுள்ளார். அதிகமான பக்கங்களில் அதனை முன்வைத்து விளக்கங்கள் கொடுத்துள்ளார்.தலைப்புகளுக்கு மத்தியில் 'ஜாமிஉஸ்ஸஙீரி' (الجامع الصغير) லிருந்து மூலத்தை (கருப்பொருள்) உருவாக்கியுள்ளார்.சில பக்கங்களில்  இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் 'கிதாபுல் அசல்' லிருந்து (மப்ஸுத் என்று சொல்லப்படும்) வாசகங்களை எடுத்தெழுதியுள்ளார்.ஆக, ஹிதாயா நூலில்  மூன்று நூல்கள் ஒன்றிணைந்துள்ளது.

ஹிதாயா நூலின் ஹதீஸ்கள் குறித்து 'தக்ரீஜ்' (வேறு ஹதீஸ் நூலில் உள்ள தரவு)

(1) அல்கிஃபாயா ஃபி மஃரிபதி அஹாதீஸுல் ஹிதாயா

(2) நஸபுர் ராயா ஃபி தஹ்ரீஜி அஹாதீஸில் ஹிதாயா

(3) அல்இனாயா லி மஃரிபதி அஹாதீஸில் ஹிதாயா

(4) அத்திராயா ஃபி முன்தஹபி அஹாதீஸில் ஹிதாயா

(5) முன்யதுல் அல்மயி

ஹிதாயா ஹதீஸ் குறித்து அறிஞர்களின் சந்தேகத்திற்கு தெளிவும், மத்ஹப் மறுப்பாளர்களின் அபாண்டத்திற்கு பதிலும்:

ஹிதாயா ஆசிரியர் மார்க்க சட்டங்களுக்கு ஆதாரங்களை ஹதீஸ்களிலிருந்தும், 'ஆஸார்' எனும் நபித்தோழர்கள் தாபியீன்களின் வழிமுறைகளிலிருந்தும் ஆதாரம் எடுத்துள்ளார்.மத்ஹப் மறுப்பாளர்கள் அதனை பலகீனமானது பொய்யானது என அபாண்டத்தை அள்ளிவீசுகின்றனர்.அல்லாமா ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் நூலான 'அத்திராயா ஃபி முன்தஹபி அஹாதீஸில் ஹிதாயா' வில் ஹிதாயாவின் அதிகமான அறிவிப்புகள்
குறித்து (لم اجد)  நான் பெற்றுக்கொள்ளவில்லை.(لا ادری) நான் அறியவில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.மேலும் இமாம் ஜயீலயி (ரஹ்) ஹனபி அவர்கள் 'நஸபுர் ராயா ஃபி தஹ்ரீஜி அஹாதீஸில் ஹிதாயா' இந்த ஹதீஸ் மிகவும் அரிதானது (هذا غريب جدا) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அதிகமாக வாசிக்கும் திறன் படைத்தவர்,விசாலமான ஆய்வாளர் அவருக்கு கிடைக்கவில்லையெனும் போது பொய்யாக தான் இருக்க முடியும்? என்று கூறி சாமானியர்களின் உள்ளத்தில் பிக்ஹின் மீதும், புகஹாக்கள்
(மார்க்க விற்பன்னர்கள்) மீதும் கெட்ட எண்ணத்தை விதைக்கின்றனர்.பிக்ஹ் மறுப்பவர்களின் இந்த குற்றச்சாட்டானது பிக்ஹின் மீதுள்ள விரோதமும் நல்லோர்களான முன்னோர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியாகும்.ஹிதாயா ஆசிரியர் சிறந்த மார்க்க விற்பன்னர் மட்டுமல்ல.மாறாக, பெரும் ஹதீஸ்கலை வல்லுநர்.தனது நூலில் கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் முற்கால அறிஞர்களின் நூல்களிலிருந்து எடுத்தெழுதியது தான்.

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள்,இமாம் ஜயீலயி ஹனஃபி  போன்றவர்களுக்கு ஹதீஸ் கிடைக்கவில்லை என்பதால் ஹதீஸானது பொய்யாக ஆகிவிடாது.இதற்கு மூன்று உதாரணங்களை மட்டும் கூறுகிறோம்.இதன் மூலம் ஹிதாயா ஆசிரியர் மீது எழும் சந்தேகம் தீர்ந்துவிடும்.

முதல் உதாரணம்

ஹிதாயா ஆசிரியர் (ரஹ்) அவர்கள் விரலால் மிஸ்வாக் செய்வது குறித்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலாக கூறியுள்ளார்.அல்லாமா ஜயீலயி ஹனஃபி ரஹ் அவர்களின் கண்ணோட்டமானது இந்த ஹதீஸானது மிக அரிதானது.

இதற்கு அல்லாமா அய்னி (ரஹ்) அவர்கள் 'பினாயா' வில் கூறியுள்ளார்கள்:அன்னார் ஸுனன் அஹ்மத் நூலை ஆழமாக பார்க்கவில்லை.ஏனெனில் இந்த ஹதீஸை  அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (உளுச்செய்யும் போது) அவரது  விரல்களில் சிலதை அவரது வாயில் (பல் துலக்க) நுழைத்தார்கள்.


இரண்டாவது உதாரணம்


தலைக்கு மஸஹ் செய்வது சம்பந்தமாக அனஸ் (ரளி) அவர்களின் ஹதீஸ் குறித்து அல்லாமா ஜயீலயி (ரஹ்) ஹனபி கூறுகிறார்கள்:இந்த ஹதீஸ் மிக அரிதானது ஆனால் இமாம் இப்னு ஹுமாம் (ரஹ்) அவர்கள் 'பத்ஹுல் கதீரில்' எழுதியுள்ளார்கள்:

முஃஜம் அவ்ஸத் (ஹதீஸ்) நூலில் முஸ்னத் இப்ராஹீம் பஙவியின் தொடரில் ஹதீஸானது நிச்சயமாக இருக்கிறது.

மூன்றாவது உதாரணம்

மத்ஹப் மறுப்பாளர்கள் ஏகத்துவ மாத இதழில் (டிசம்பர்-2016) மாநபியின் மீது பொய்யுரைக்கும் மத்ஹபுகள் என்ற தலைப்பில் எழுதியிருப்பதை பாருங்கள்!



//ஹிதாயா நூலாசிரியருக்கு நிதானம் என்பது கொஞ்சங் கூட இல்லை. பொய்யான செய்திகளை நபியின் பெயரில் சொல்வது மட்டுமின்றி  இருக்கும் ஹதீஸ்களைக் கூட ஒழுங்காகக் கவனிக்காமல் முன் பின் மாற்றி, இல்லாதததை ஹதீஸில் செறுகி சொல்லிவிடும் இவரது தொடர் வழக்கத்திலிருந்து இந்தப் புரிதல் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.



இதோ மேற்கண்ட புரிதலை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியை பாருங்கள்.



விந்து அசுத்தமானது; ஈரமாக இருந்தால் அதைக் கழுவ வேண்டும்; காய்ந்து விட்டால் அதைச் சுரண்டி விட்டாலே போதுமானது என்று சட்டம் சொல்லி விட்டு வழக்கம் போல் ஆதாரம் காட்டும் இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்.



لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ لِعَائِشَةَ { فَاغْسِلِيهِ إنْ كَانَ رَطْبًا وَافْرُكِيهِ إنْ كَانَ يَابِسًا }



நபிகள் நாயகம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அது ஈரமாக இருந்தால் கழுவி விடு, காய்ந்து விட்டால் அதை சுரண்டி எடுத்து விடு என்று கூறியுள்ளார்கள்.



ஹிதாயா, பாகம் 1, பக்கம் 35



நபிகளார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இவ்வாறு சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட செய்தி கூட இல்லை. இவர்களின் வகையறாக்கள் இட்டுக் கட்டியிருந்தாலே தவிர//

ஹனஃபி ஷாபியி அறிஞர்கள் ஹிதாயா ஹதீஸ் குறித்து கிடைக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள்.ஆனால் மத்ஹப் மறுப்பாளர்கள்,பொய்யானது என்பதாக அபாண்டமாக சித்தரிக்கிறார்கள். பழியை அள்ளிவீசுகின்றனர்.(தக்க பதிலடியை இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்!)

உண்மையில் இந்த ஹதீஸானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லாக வார்த்தை மாற்றத்துடன் ஆயிஷா (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

'முன்யதுல் அல்மயி' என்ற நூலில் 20 ஆம் பக்கத்தில் ஆயிஷா (ரளி) வாயிலாக அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.روي ابن الجارود ثنا محمد ابن اسحاق و احمد بن يوسف قالا ثناابوحذيفة ثنا شقيق عن منصور عن ابراهيم عن همام بن الحارث قال كان ضيف عند عاءشة فاجنب فجعل يغسل ما اصابه فقالت عاءشة رضي الله عنها كان رسول الله يامرنا بحته

ஆயிஷா (ரளி) அவரிடத்தில் விருந்தினர் தங்கியிருந்தார்.
அவருக்கு  குளிப்பு கடமையானது.அவர் மீது இருந்த அசுத்தத்தை கழுவ ஆரம்பித்தார்.அதற்கு ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு (அசுத்தத்தை) சுரண்டும்படி ஏவினார்கள்.

ஆக,வார்த்தை மாற்றங்களுடன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லாக அறிவிப்பாளர்களின் தொடருடன்  வந்துள்ளது.பொய்யாக திரித்து கூறவில்லை.

பொய்யாக கூறுவது மத்ஹப் மறுப்பாளர்களா? ஹிதாயா ஆசிரியரா? நிச்சயம் மத்ஹப் மறுப்பாளர்கள்தான்.



ஏகத்துவ மாத இதழில் ஹிதாயா ஆசிரியரின் மீது அபாண்ட பழிசுமத்தியதற்கு மன்னிப்பு கேட்க தயாரா? 



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment