Thursday, July 22, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:10

ஸஹாபாக்களின் காலத்தில் தனிநபரை பின்பற்றுதல் 
(தக்லீத் ஷஹ்ஷி) பகுதி:1

பொதுவாக தக்லீத் குறித்து ஆதாரங்களை பார்த்தோம்.அவைகளில் ஸஹாபாக்களில்,தாபியீன்களில் தனிநபரை தக்லீத் செய்வது குறித்து இல்லை.மாறாக ஒரு அறிஞரிடம் மஸ்அலாவை கேட்டு அமல்செய்வது.மற்றொரு அறிஞரிடம் மஸ்அலாவை கேட்டு அமல்செய்வது.இதே போன்று தனிநபரை தக்லீத் குறித்து ஆதாரங்கள் உண்டு.

ஸஹீஹுல் புகாரியில் இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பு 

أن أَهْلَ المَدِينَةِ سَأَلُوا ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ امْرَأَةٍ طَافَتْ ثُمَّ حَاضَتْ ، قَالَ لَهُمْ : تَنْفِرُ ، قَالُوا : لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعُ قَوْلَ زَيْدٍ

இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஒரு பெண் வலம்வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?' எனக் கேட்டனர். அதற்கவர்கள், 'அவள் (தவாஃபுல்வதா செய்யாமல்) போய் விட வேண்டியது தான்!' என்றார்கள். அப்போது அவர்கள், 'உம்முடைய சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் கூற்றைவிட்டுவிட நாங்கள் தயாரில்லை!' என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்!' என்றார். 
அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி பாடம்:كتاب الحج, தலைப்பு:باب إذا حاضت المرأة بعد ما افاضت)

இந்த அறிவிப்பானது முஃஜம் இஸ்மாயிலில் அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபி வழியாக வருகிறது.அதில் மதீனாவாசிகள் கூறிய வார்த்தை 

فقالوا : لا نبالى أفتيتنا أو لم تفتنا، زيد بن ثابت يقول لا تنفر 

நீங்கள் தீர்ப்பு கொடுத்தாலும், தீர்ப்பு கொடுக்கவில்லையென்றாலும் நாங்கள் பொருட்படுத்மாட்டோம்.ஜைத்(ரளி) அவர்கள் கூறியது அந்தப்பெண் தவாபின்றி புறப்படமாட்டாள்.

(ஆதாரம்:பத்ஹுல் பாரி 3/468,உம்ததுல்காரி 4/777)


இந்நிகழ்வு முஸ்னத் அபூதாவூத் தயாலிஸியில் கதாதா (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்துசொல்லப்பட்டுள்ளது.அதில் மதீனாவாசிகள் கூறிய வாரத்தை

.. لا نتابعك يا ابن عباس وأنت تخالف زيداً. فقال : سلوا صاحبتكم أم سليم

இப்னு அப்பாஸே!  நீர் ஸைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடம் கருத்துவேறுபாடு கொண்ட மஸ்அலாவில் உம்மை பின்பற்றமாட்டோம்.அதற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள் (மதீனா சென்று)உம்முஸுலைம் (ரளி) அவர்களிடம் கேளுங்கள்.

(ஆதாரம்:முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி 229)

இந்த சம்பவத்தில் மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் உரையாடலில் இருவிஷயங்களை புரியமுடிகிறது.

ஒன்று,மதீனாவாசிகள் ஹள்ரத் ஜைது இப்னு ஸாபித் (ரளி) அவர்களை குறிப்பாக பின்பற்றி வந்துள்ளனர்.அவர்களின் சொல்லிற்கு மாற்றமாக வேறு நபரின் சொல்லை பின்பற்றவில்லை.அதுமட்டுமின்றி முஃஜம் இஸ்மாயில் அறிவிப்பில் வருகிற வாசகம் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) தனது தீர்ப்பின் ஆதாரத்தில் உம்முஸுலைம் (ரளி) மற்ற இது போன்ற ஹதீஸ்களை கூறியுள்ளார்கள்.அப்பொழுதும் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களின் சொல்லின் மீது தான் நம்பிக்கை வைத்தார்கள்.ஏனெனில் தங்களின் விஷயத்தில் அவர்களின் சொல்லைதான் ஆதாரமாக கருதினார்கள்.ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் பத்வாவின் பேரில் அமல் செய்யாமல் இருப்பதற்கு இதனை தவிர வேறு காரணம் இருக்கமுடியாது.அது ஹள்ரத் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களின் கருத்திற்கு எதிராக இருந்ததுதான்.

இரண்டாவது, ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் மதீனாவாசிகளுக்கு எதிராக தனிநபரை பின்பற்றுகிறீர்கள் என்பதாக குற்றம் சுமத்தவில்லை.பாவம்,குற்றம் என்பதாக ஏன் கூறவில்லை?மாறாக,உம்முஸுலைம் (ரளி) அவர்களிடம் உறுதிப்படுத்தி,ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடத்தில் மீண்டும் அணுகவேண்டும் என்பதை வழிகாட்டினார்கள்.எனவே மதீனாவாசிகளும் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் வழிகாட்டலில் பேரில் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களிடத்தில் அணுகி உறுதிசெய்து,மீண்டும் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்களிடம் சென்றனர்.இதன்முடிவில் ஜைத் இப்னு ஸாபித் (ரளி) அவர்கள் மீண்டும் ஹதீஸை ஆய்வுசெய்து தனது முந்தைய தீர்ப்பை மாற்றினார்கள்.இதனை குறித்து இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களுக்கு தெரியப்படுத்திய அறிவிப்புகள் முஸ்லிம்,நஸாயி,பைஹகி போன்ற நூல்களில் உள்ளது.

குறுக்கு கேள்வியும் நடுநிலையான பதிலும்

மதீனாவாசிகள் தக்லீத் செய்பவர்களாக இருந்தால் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் ஹதீஸை குறித்து ஏன் ஆய்வு செய்தார்கள்? 

நமது பதில்:முஜ்தஹிதை தக்லீத் செய்யும்போது ஹதீஸ்களை ஆராய்வது ஹராம் என்பதாக மத்ஹப் மறுப்பாளர்கள் தவறாக புரிந்துள்ளனர்.இவர்களின் அதிகமான குற்றச்சாட்டுகள்,ஆதாரங்கள் தவறான புரிதலின் பேரில் உள்ளது.தக்லீத் என்பது குர்ஆன்,சுன்னாவை நேரடியாக அணுகி கருத்தை புரிவதற்கு,வெளிப்படையான முரண்பாடுகளை நீக்குவதற்கு,மாற்றப்பட்டது, மாற்றக்கூடியது போன்ற விஷயங்களில் ஞானம்,தகுதி இல்லாதவர் ஏதேனும் ஆய்வாளரிடம் ஆதாரங்களை கேட்காமல் அவரின் இல்மின் மீது நம்பிக்கை வைத்து அவரின் பத்வாக்களை அமல் செய்வதாகும்.எனினும்,
முஜ்தஹிதின் தீர்ப்பின் பேரில் அமல் செய்த பிறகு குர்ஆன்,ஹதீஸின் ஞானத்தை பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது என்பது தக்லீதில் ஒரு போதும் வராது.ஆய்வின் வாசல் தக்லீதிற்கு பிறகும் திறந்துள்ளது.இதனால் தான் ஆயிரக்கணக்கான முகல்லித்கள் (இமாமை பின்பற்றுபவர்கள்) தக்லீத் செய்வதுடன் குர்ஆனின் விரிவுரைகளை,ஹதீஸ்களின் விளக்கவுரைகளை தங்களின் இல்மின் விசாலத்திற்கு ஏற்ப,அதனை அதிகரிக்க ஆய்வுத்திறனை வளர்த்துக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள்.இந்த ஆய்வுகளுக்கு மத்தியில் ஏதேனும் மஸ்அலாவில் தெளிவான ஹதீஸ்களுக்கு,முஜ்தஹிதின் கருத்து மாற்றமாக உள்ளது உறுதியாக தெரிகிறது.மேலும் அதற்கு எதிரான ஆதாரமும் இல்லை எனும் போது தனது இமாமை பின்பற்றுவதற்கு பதிலாக சரியான,தெளிவான ஹதீஸை அமல் செய்வார்கள்.இது குறித்து முழுமையான விளக்கம் பின்னால் இன்ஷா அல்லாஹ் வரும்.ஏதேனும் முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) தனது இமாமின் ஏதேனும் சொல்லானது ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தால் அந்த ஹதீஸை ஆய்வுசெய்வது தக்லீதிற்கு எதிரானது இல்லை.எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஆய்வு செய்வது,தக்லீத் இரண்டிற்கும் ஆதாரம் உள்ளது.

எனினும்,இந்த ஹதீஸில் நாம் புரியவேண்டிய முக்கிய அம்சம் "நாங்கள் ஜைத் (ரளி) அவர்களின் சொல்லை விட்டுவிட்டு உங்களின் சொல்லை அமல் செய்யமாட்டோம்".
இது தனிநபரை பின்பற்றுவதாக இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?

இரண்டாவது ஆதாரம்:

ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாம்விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். 

فقال لا تسألوني ما دام هذا الحبر فيكم

அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் புகாரி பாடம்:كتاب الفرائض தலைப்பு:  باب ميراث ابنته ابن مع  ابنته 2/997)

முஸ்னத் அஹ்மதி போன்ற நூல்களில் வரும் அறிவிப்பு 

قال أبو موسى لا تسألوني عن شيء ما دام هذا الحبر بين أظهركم. 

இந்த (இப்னு மஸ்ஊத் (ரளி)) தேர்ச்சி பெற்ற அறிஞர் உங்களுக்கு மத்தியில் இருக்கும் வரை என்னிடத்தில் மஸ்அலா கேட்காதீர்.
(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,1/464,أحاديث عبد الله بن مسعود)

கவனித்து பாருங்கள்! 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் உயிரோடு வாழும் வரை அனைத்து மஸாயில்களிலும் அவர்களிடத்திலே கேளுங்கள் என்பதாக அபூமூஸா அஷ்அரி (ரளி) அவர்கள் தக்லீத் ஷஹ்ஷியை  (தனிநபரை பின்பற்றுவதை) வலியுறுத்தியதை புரிந்து கொள்ள முடிகிறது.

குறுக்கு கேள்வியும் நியாயமான பதிலும் 

ஹள்ரத் அபூமூஸா (ரளி) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் இருக்கும்போது தன்னை தக்லீத் செய்வதைதான் தடுத்துள்ளார்கள்.எனினும்,
அவர்கள் மற்ற ஸஹாபாக்களிடத்தில் செல்வதை எவ்வாறு தடுத்திருக்க முடியும்? இதனை ஒருபோது இதன்மூலம் புரியமுடியாது.

நமது நியாயமான பதில்:

 அனைத்து நிகழ்வுகளும் கூபாவில் நடந்துள்ளது.அங்கு ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள்  மிகப்பெரிய அறிஞராக இருந்தார்கள்.ஹள்ரத் உஸ்மான் (ரளி) கிலாபத்தில் நடந்துள்ளது.அப்போது அலி (ரளி) அவர்களும் அங்கு வரவில்லை.அப்போது ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களை விட பெரிய அறிஞர் ஒருவரும் இல்லை.இதன்காரணமாக அபூமூஸா (ரளி) அவர்களின் வழிகாட்டுதல் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் வாழும் வரை அவர்களிடம் மட்டும் மஸாயில்களை கேளுங்கள்.அவர்களை விட்டுவிட்டு என்னிடத்தில் மற்றவரிடத்தில் செல்லாதீர் என்பதன் மூலம் தனிநபரை பின்பற்றுவதை தான் விளக்குகிறது.

முஃஜமுத்தப்ரானியில் வரும் 
அறிவிப்பு:
  பால்குடி மஸ்அலாவில் அபூமூஸா (ரளி) அவர்களை அணுகிய போதும் அதைதான் கூறினார்கள் 

فقال : لا تسألوني عن شيء ما أقام هذا بين أظهرنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم 

நமக்கு மத்தியில் இவர் (இப்னு மஸ்ஊத் ரளி) அவர்கள் இருக்கும்வரை எந்தவிஷயத்திலும் என்னிடத்தில் கேட்காதீர்.
எனவே அபூமூஸா(ரளி) அவர்கள் கூறியது தனிநபர் பின்பற்றுவதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளது.

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித்,4/262,பாடம்:باب الرضاع)

No comments:

Post a Comment